திங்கள், 12 மே, 2014

அண்ணன் பெரியார் சாக்ரடீசு மறைவு !


என்ன சொல்வதென்று தெரியவில்லை !
அண்ணன் பெரியார் சாக்ரடீசு மறைவு !
தந்தை பெரியார் கடைசியாய் சைதாபேட்டையில் 
உரையாற்றிய நாள் பார்த்து சொல்லும்படி கூறினார் என்று சகோதரி செல்வலெட்சுமி  கூறினார் அவரிடம் பார்த்துவிட்டு 18.02.1973 என்று சொன்னேன் ! 
பின்னர் நானும் தொலைபேசியில் அழைத்து அதே தகவலை சொன்னேன் !
அது எங்கள் கடைசி உரையாடலாக போய்விட்டது !
அதன்பின் நான் மருத்துவமனையில் தான் பார்த்தேன் !
 வெள்ளிகிழமை செவிலியர் ஆய்வு செய்வதற்காக 
பெரியார் சாக்ரடீசு என்று அழைத்தபோது கண்ணை திறந்து பார்த்தார் !
அதை சொல்லி நம்பிக்கையூட்ட வெளியில் வந்தேன் 
ஆனால், எல்லோரும் அழுதுகொண்டிருந்தர்கள் !
 நான் மட்டும் நம்பிக்கையோடு இருந்தேன்!
வழக்கம் போல் என் நம்பிக்கை பொய்த்துவிட்டது!
பின்னர் மேலும் மோசமான நிலைக்கு உடல்நிலை ஆனது !
ஞாயிறு முழுவதும் அங்கேயே இருந்தேன் !
அண்ணன் வைகறை அவர்கள் மதியம் வந்து ஏதாவது சாப்பிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார் ! ஆனால் நான் மறுத்துவிட்டு காத்திருந்தேன் கண் திறப்பார் என்று !
அன்று இரவு ஒரு அறுவை சிகிச்சை செய்தார்கள் !
அதன் பிறகு  அறுவைசிகிச்சை செய்துவிட்டு மருத்துவர் சொன்ன நம்பிக்கைக்குரிய வார்த்தைகளோடு திடலுக்கு வந்துவிட்டேன் ! 
காலை நீதிமன்றம் சென்றுவிட்டு வந்து ஆசிரியர் அய்யாவை பார்த்தேன்  
 ஆசிரியர் எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் எழுதிய ஒரு 
கட்டுரையை தேடி எடுத்துவரச்  சொன்னார்!
இதற்கு முன் இது போன்ற பணிகளுக்கு அண்ணன் சாக்ரடீசு அவர்களின் உதவியை பல முறை நாடியிருக்கிறேன் !
நேற்று முடியவில்லை தோழர் பிரின்ஸ் கண்ணில் பட்டார் !
அவரிடம் கேட்டேன் !
பின்னர் தான் தெரிந்தது நான் பிரின்ஸிடம் கேட்ட சிறிது நேரத்திற்கு முன்புதான் அண்ணன் மூளை சாவு என்ற நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறார் என்பது !
 அந்த நிலையை என்னிடம் சொல்லாமல் பிரின்ஸ் இணையத்திலும் தமிழர் தலைவர் நூலிலும் தேட சொன்னார் !
நானும் அதை எடுத்து ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு , மருத்துவமனைக்கு கிளம்பினேன் !
தோழர் சுரேஷ் தகவலை கூறினார் !
எனக்கு எனது பணிதொடர்பான எல்லா ஆலோசனைகளையும் தந்த 
எங்கள் ஆருயிர் அண்ணன் மறைந்தார் என்றவுடன் 
என்ன செய்வதென்று தெரியவில்லை 
அந்த நேரம் வரை முதல் நாள் அறுவைசிகிச்சை செய்துவிட்டு மருத்துவர் சொன்ன நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை மட்டுமே நம்பிவந்த நான் அதிர்ந்து அழுதேன் !

பொதுவாக எதிர்மறையாகவே சிந்திக்கும் நான் முதல் முறையாக நேர்மையாக சிந்தித்தேன் !
காரணம் என்னால் ஏற்கமுடியாத நிகழ்வாக இதை எண்ணியதால் .....
எனக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தந்தவரை காணவில்லை எங்கே தேடுவேன் !

சனி, 2 ஜூன், 2012

பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள் கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்


பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள்
கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்

கோவா, நவ.30-கோவாவில் கடந்த நவம்பர் 23-ஆம் தொடங்கி, 42-ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று முக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர் களின் படைப்புகள் திரையிடலுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டு (நவம் பர் 28) திரையிடப் பட்டன. சென்னையில் இயங்கிவரும் எம்.ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவ னத்தில் பயிலும் மாண வர்களின் நான்கு குறும் படங்கள் விழா நடை பெறும் மக்கினஸ் பேலஸ் அரங்கில் திரை யிடப்பட்டன. டி.சுரேஷ் குமார் இயக்கிய கருக்கு, கண்ணன் இயக்கிய அச்சுப்பிழை, சுவிக் குமாரின் இயக்கத்தில் முகாரி, பாக்கியராஜ் இயக்கிய பாட்டி நா ஆகிய நான்கு குறும் படங்கள் பெரும் வர வேற்பைப் பெற்றன. திரைப்படக்கல்லூரி பேராசிரியர் வி.எம். ரவிராஜ், மாணவர்கள் சுரேஷ்குமார், மோகன் ஆகியோர் திரையி டலின் போது நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக் கப்பட்டனர். இவற்றில் அச்சுப்பிழை என்ற படத்தில் கதாநாய கனாக வடசென்னை மாவட்ட தி.க இளை ஞரணி செயலாளர் வை.கலையரசன் நடித்தி ருந்தார்.
முன்னதாக திரை யிடலையொட்டி நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பன்னாட்டுத் திரைப்பட விழாவில் மாணவர்களின் படைப்புகளுக்கும் தனி இடம் அளித்தது மகிழ்ச் சிக்குரியது. மத்திய அரசின் செய்தி ஒளி பரப்புத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா, புனே திரைப்படக் கல் லூரிகள் மட்டு மல்லா மல், முழுக்க முழுக்க தமிழக அரசால் மட்டு மே நடத்தப்படும் மிகவும் பழைமைவாய்ந்த எம்.ஜி.ஆர்.அரசு திரப் படக் கல்லூரிக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட்டி ருப்பது பெருமைக்குரிய தாகும். இதற்கென அமைக்கப்பட்ட குழு வின் பொறுப்பாளர் சென்னைக்கு வந்து, படங்களைப் பார்த்து தேர்வு செய்தார் என்று பேராசிரியர் வி.எம். ரவிராஜ் தெரிவித்தார். கடந்த 22-ஆம் தேதி முதல் 30-க்கும் மேற் பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வருகிறார் கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தமிழ கத்திலிருந்து நடிகை ரேவதி, தசாவதாரம் கலை இயக்குநர் பிர பாகரன் ஆகியோர் இயக்கிய குறும்படங் களும் திரையிடப் பட்டன. தமிழக மீனவர் பிரச்சினையையொட்டி லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் என்ற திரைப்படம் இந் தியன் பனோரமா பிரி வில் இடம்பெற்றுள்ளது.

சனி, 26 மே, 2012

சமச்சீர் கல்வி



சமச்சீர் கல்வி முறையை மாற்ற முடியாதபடி அமைந்துவிட்டது உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு! அதனால் தான் 1, 6- ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்ட நூல்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிற வகுப்புகளுக்கான பாடங்கள் சரியில்லை என்று தமிழக அரசு சொல்வதால் அவற்றை ஆராயக் கல்வியாளர் களைக் கொண்ட குழு அமைத்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றோர் யார் தெரியுமா? அத்தனையும் அவாள்கள் _- அரசு அதிகாரிகள் இருவரைத் தவிர! மத்திய பாடத்திட்டக் குழுவில் இருந்து இடம்பெற்றோரில் ஒருவர் பார்ப்பனர். மற்றொருவர் மதத்தையும், கல்வியையும் பிரிக்கக்கூடாது என்று கட்டுரை எழுதிய அனில் சேத்தி என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். சரி, கல்வியாளர்களைக் கொண்ட குழு என்று இவர்கள் சொன்ன பட்டியலில் இருந்தவர்கள் பிரபலமான கல்வி வியாபாரிகளே அன்றி கல்வியாளர்கள் அல்லர். ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஒரே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் கூடக் கிடையாது. ஏன், அரசு ஆசிரியர்கள் யாருக்கும் இந்தக் குழுவில் இடம்பெறும் தகுதி கிடையாதா? தனியார் பள்ளி முதலாளிகள் எல்லாம் நெய்யில் பொரித்தவர்கள்.. நாங்கள் என்ன குருடாயிலில் பொரித்தவர்களா? என்று எந்த அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பும் கேட்கவில்லை. அத்தனை லட்சம், இத்தனை லட்சம் ஆசிரியர்கள் என்றெல் லாம் கூட்டம் போடுவது பஞ்சப் படி, பயணப் படிக்குத்தானா என்று தெரிய வில்லை.
வெட்கம்..வெட்கம்! ஆக மொத்தம் அக்கிரகாரக் குழு கூடி, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பற்றி ஆராய்ந்தது... நரிகள் கூடி நண்டு நல வாரியம் அமைத்தது போல! நான்கு வருணத்துக்கும், நான்கு பாடத்திட்டம் என்பது போல ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டம் என இருந்ததை மாற்றியாகி விட்டது. அதை ஒன்றும் செய்ய முடியாது. கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்ற பதட்டத்தில் இருந்தவர்கள், பாடத்திட்டத்தில் சமூக அக்கறையோடு இருக்கும் பகுதிகளை அனுமதிப்பார்களா?
கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் படிப்பவனும், என் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்ற மேட்டிமைத் திமிர், பார்ப்பனத் தனம், ஏற்கெனவே இருக்கும் பிரிவினைகளைத் தகர்த்துவிடுமோ என்று இவர்களின் கோபங்களைக் கிளறியிருக்கிறது. இதுவரை வரலாற்றுப் பாடத்தில் சேர, சோழர், பாண்டியர் காலத்துக்குப் பிறகு தமிழகத்துக்கென்று வரலாறே இருக்காது. நீதிக் கட்சி என்ற வார்த்தையை பாடத்தில் பார்க்கவே முடியாது. சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் பட்டியலில் ஆரிய சமாஜத்தின் பெயர் தான் இருக்கும். பூலேவும், சாகுமகராஜும், நாராயணகுருவும், அம்பேத்கரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரையும் சேர்த்து தந்தை பெரியாரின் பெயரையும் வேறு சமச்சீர் கல்வியில் சேர்த்துவிட்டால் பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு!
பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, தியாகராயர், டி.எம்.நாயர், முத்துலெட்சுமி ரெட்டி இன்னும் சமூக சீர்திருத்தத் தலைவர்கள் பற்றிய பாடங்களைத் தூக்க பரிந்துரைத்துள்ளது அக்கிரகாரக் குழு! பாடத்திட்டத்தில் தரம் இல்லை என்று சொல்லும் இவர்கள், பெரு வெடிப்புக் கொள்கை போன்றவற்றை கிராமப்புற மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அவர்களின் தரத்துக்கு மிஞ்சியதாக இருக்கிறது என்று நீலிக் கண்ணீரும் வடித்துள்ளது.
ஒருபக்கம் பாடத்திட்டத்துக்குத் தரமில்லை என்பது...! இன்னொரு பக்கம் பாடத்தைப் படிக்க மாணவர்களுக்குத் தரமில்லை என்பது! எத்தனை திமிர்? எத்தனை வேடம்? கிராமப்புற மாணவர்களுக்குப் படிக்கத் தகுதியில்லை என்று சொல்லுவதற்கு எவ்வளவு ஜாதித் திமிர் இருக்க வேண்டும்?
இதைக் கண்ட திராவிடர் கழக மாணவரணி கொதித்தெழுந்தது.
தமிழக அரசு அமைத்த அக்கிரகாரக் குழுவின் அறிக்கையை, எந்த அண்ணாவையும், பெரியாரையும் மறைக்கத் துணிந்தார்களோ, அதே அண்ணா பெயரிலமைந்த சாலையில், பெரியார் சிலையருகே கொளுத்தி முழக்கமிட்டனர் திராவிட மாணவர்கள். உடனடியாகக் கூடி அக்கிரகாரக் குழு அறிக்கையைக் கொளுத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் மு.சென்னியப்பன், வை.கலையரசன், பரந்தாமன், விஜயகுமார், கார்த்திக் ஆகிய 5 பேர் மேல் மட்டும் வழக்குத் தொடுத்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாகப் பரவிவிட்டது தீ!
தஞ்சை, உரத்தநாடு என்று பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் அக்கிரகாரக் குழுவின் அறிக்கையைத் தீக்கிரையாக்கினர்.
இன்னும் பரவும் இந்தத் தீ! அன்று குலக்கல்விக்கு எதிராக பெரியார் பரவ ஆணையிட்ட தீ, இன்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாய்ப் பரவட்டும்!
கல்வியில் கைவைத்த யாரும் தமிழ்நாட்டில் நிலைத்ததாய்ச் சரித்திரமில்லை!
குல்லூகப்பட்டர் ராஜாஜி ஓடி ஒளிந்த சரித்திரம் பாடப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. ஆனால், மக்கள் மனங்களில் அழியாமல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பாடப் புத்தகத்தில் வருணபேதம் உண்டாக்கும் ராஜாஜியின் வாரிசுகள் ஒழிந்த வரலாறு நாளை வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும்.
அதற்கான தீ பரவட்டும்! பரவட்டும்!!

வியாழன், 17 மே, 2012


பெர்ட்ரசண்ட் ரசல்


உலக நாத்திக அறிஞர் பெர்ட்ரசண்ட் ரசல் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (18.05.1872).
உயர் எண்ணங்களை - சிந்தனை வித்துகளை உல கிற்கு வாரி வழங்கியவர். அவருடைய கருத்துகள் பல தொகுதிகளாக வெளிவந் துள்ளன. அவை காலத்தை வென்று நிற்கக் கூடிய ஒளி முத்துகள்!
பிரிட்டீஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் சார்பில் உட்ரோ உவையட் என்பவர் ரசலிடம் கண்ட பேட்டி 13 தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.
உவையட்: ஒரு நம்பிக் கையை அல்லது மதத்தைப் பின்பற்றவேண்டும்; இன்றேல் வாழ்க்கையை எதிர் நோக்க முடியாது என்று கூறும் மக்கள் என்ன ஆவது?
ரஸலின் பதில்: ஒரு வகையான கோழைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாக உணரும் மக்கள் வேறு எந்தத் துறையிலும் வெறுக்கத்தக்கவர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், மதத்துறையில் காணப்படும்போது, அது பாராட்டத்தக்கதாக நினைக் கப்படுகிறது. கோழைத்தனம் எந்தத் துறையில் காணப்பட்டாலும் நான் அதைப் பாராட்ட முடியாது.
உவையட்: ஆனால், நீங்கள் அதைக் கோழைத் தனம் என்று கூறுகிறீர்கள்!
ரஸலின் பதில்: இது இல்லாமல் அது இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து நிற்க முடியாது என்று கூறு வதற்காக சொல்கிறேன். வாழ்க்கை எதை அவர்களுக்குத் தந்தாலும் ஒவ் வொருவரும் வாழ்க்கையை எதிர்த்து நிற்கக் கூடியவர் களாக இருத்தல் வேண்டும்.
உவையட்: அப்படியானால், மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கடவுளின் மேலோ, பூசாரியின் மீதோ அல்லது அமைப்பாக உள்ள மதத்தின்மீதோ போட்டு விடுகிறார்கள்; அவர்களாகவே பிரச்சினைகளை சமாளிப்பதில்லை என்ற அர்த்தத்தில் அதைக் கோழைத்தனம் என்று கருதுகிறீர்களா?
ரஸலின் பதில்: ஆமாம், உலகில் உள்ள மிக ஆபத்தான நிலைபற்றிய பிரச்சினையை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆகா, கடவுள் அதைக் கவனித்துக் கொள்வார் என்று கூறும் கடிதங்கள் எனக்கு எப்பொழுதும் வருகின்றன. ஆனால், கடவுள் கடந்த காலத்தில் ஒரு போதும் அப்படிக் கவனித்துக் கொண்டதில்லையே, ஆனால், வருங்காலத்தில் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
இவ்வாறு பகுத்தறிவின் அடிப்படையில் தர்க்கப்போர் புரிந்த மேதைதான் ரஸல்.
98 ஆண்டுகாலம் வாழ்ந்து காட்டியும் உள்ளார். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனித்த சிந்தனைகளால் அந்தச் சூழல் விலங்கு களை உடைத்தெறிந்து என் றென்றும் ஒளிவீசித் திகழும் அந்தப் பெரு மகனின் பகுத்தறிவுச் சிந் தனைகளைப் போற்று வோம்!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பெரியாரின் அறிக்கையின் விளக்கம்


(தந்தை பெரியார் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் பல நேரங்களில் பல தவறான தகவல்களை கூறுவது உண்டு. அது போல ஒன்றுதான்   தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்? என்ற புஸ்தகத்தை  மொழி பெயர்த்ததற்காக இந்தியன் பீனல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட போது பெரியார் பயந்துவிட்டார் என்பதாகும். அந்த நேரத்தில் பெரியாரின் நிலைபாட்டை விளக்கும் அறிக்கை இதுதான் : இது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட குடிஅரசு தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.)

      உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்? என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்த தற்காகவும் இந்தியன் பீனல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்.
           அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரச்சாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத் தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாப்பீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
                இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந் தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும், பெரும்பான்மை யான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த மன்னிப்புக் கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.
                     அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு, அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், வருவதையும், போவதையும் இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று, ஒரு சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிளெல்லாம் என் பின் தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன. இன்னமும் இருந்து வருகின்றன.
               இவை தவிர, பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப்பட்டதுடன், என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும், அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.உதாரணமாக, தோழர் சர்.ஆர்.கே.ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் ஊ.ஐ.னு. இன்ஸ்பெக் டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்து விட்டது.
இயக்க சம்பந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்தி லிருந்தும் விலகிக் கொள்ளவும், பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்கமென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்துகொண்டு இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்க்க போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும், என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடு செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம். இதனால் எல்லாம் நம்முடைய விரோதிகள் பலரும், இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து, விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம், பேஷ் பேஷ் என்று நம்மை உற்சாகப் படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய, மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும், சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொறுப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.
               அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்கு வரத்தோ, பிரச்சார சம்பந்தமோ ஏதும் இல்லையென்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்ட மறுப்பு இயக்க மல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன். மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷம் உண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்ட தென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.
           இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரி களும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள். ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக் குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டுமென்பதற்காகவே ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.
               நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமுகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாத தல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம், என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று உணர்கிறேன். இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.
                ஆனால், ஓர் அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில சமதர்மக் கொள்கையை பிரச்சாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லையென்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மதக் கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பட்சம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும், முயற்சிகளும், நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டிய தாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.
              சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும் நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப்படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் சட்டவரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம், சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடைசி பாராவில் தெளிவாய்க் காட்டியிருக்கிறோம்.
செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்தபோது  நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டிலும் குறிப்பு காட்டி இருக்கிறேன்.மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.
இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.
இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கைகளில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு ஆத்திரம் காட்டி  அவ்வப்போது கண்டித்துக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.
                  சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும், பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும், தேசியமென்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தியா பூராவுமே பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம். இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் தேசத் துரோகி சர்க்கார் தாசர் என்ற பெயரைக்கூட வாங்கினோம். இதனால் எல்லாம் கெட்டுப் போகாத, அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும், அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ, சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விட சற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித்தனமான காரியமாகு மென்றே நினைக்கிறேன்.சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப்பிராயத் துக் காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம். இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்லலாம். இதைப்பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம்.இவை எல்லாம் எந்த - எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும். அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர் களாக கருதப்பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்.
            எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அது விளங்கும்.  ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அக் கட்சியை வைதுக் கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரியவில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய்... காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய் இருந்தவர்கள் காங்கிரசை வைதுக் கொண்டும், காந்தியாரை வைதுக்கொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு சேமமில்லை என்று சொல்லுகின்றவர் களையும் நாம் பார்க்கவில்லையா? பெசண்டு அம்மையாரை குருவாகவும், தெய்வமாகவும் கொண்டு அந்த ஸ்தாபனத்தைத் தெய்விக ஸ்தாபனமாகவும் கொண்டாடியவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்கவில்லையா? மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும், விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும், விட்டுப் போவதும்,  முஸ்லிம் முஸ்லிம் மதத்தையே வைவதும், விட்டுப் போவதும் இவற்றிற்கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை தெய்வத் தன்மை பொருந்திய மத விஷயங்களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்துவர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி யின்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும், பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மை யான முடிவுடன் ஏற்பட்டதனால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி.
                ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள், எதிரிகள் என்ன சொல்வார்கள் என்பதையே முக்கியக் குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங் கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
              ஆகவே இயக்க சம்பந்தமாகவும், திட்டங்கள் சம்பந்தமாகவும், வழக்கு சம்பந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்பந்தமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமையையும், அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.

குடிஅரசு - தலையங்கம் - 31.03.1935

சனி, 5 பிப்ரவரி, 2011

மகனை இழந்த வருத்தமும் மறைந்தது-வீர நடராசன் தந்தையார் விண்ணப்பம்


திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்கள் திராவிட தனி மொழியாம் தழிழைக் கெடுத்து நமது தாய் நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி சய்து சுமத்தின் இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய் நாட்டின் நலங் கருதி எதிர்த் தொழில் எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன் என்னிடம் கேட்டபோது, நான் மன மகிழ்ந்து ஒத்துக் கொண்டேன். அப்பெரும் போர்ப் புயலில் எனது மகன் 15.1.1939-ல் மாண்டான் என்ற செய்தி கேட்டு மனம் நொந்து மதி மயங்கி வாழ்ந்து வந்தேன். அந்த துக்கச் செய்திக்குப்பிறகு ஓராண்டுக்கு மேற்சென்று அதன் பிறகு தாய் நாட்டில் பல மாறுதல்கள் கண்டேன் எனது மனம் மட்டும் ஆறுதலடையவில்லை.
2.2.1940  பத்திரிகைச் செய்தியை பார்த்ததும் நான் எனது வாழ்நாளில் அடைய முடியாததும் அடைந்திராததுமான மகிழ்ச்சியுற்றேன், சர்க்காரின் பிடிவாதத்தை தகர்த்து கட்டாய இந்தியை ஒழித்தது எனது மகனும் அவனைப் போன்ற ஆயிரக்கணக்கான வாலிபர்களும் சய்த தியாகம் அல்லவா என்பதை நினைத்த போது நான் அடைந்த களிப்பை என்னென்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் என்பதற்கேற்ப நமது திராவிட மக்கள் தாய் நாட்டிற்காக வெற்றி காணும் வரை உழைத்து வெற்றி கண்டு மகிழ்வதற்கு கட்டாய இந்தி நுழைவு, தமிழர் அறப்போர், திராவிடர் சிறைபுகல் நடராசன் தாலமுத்து மரணம், பெரியார் கர்ஜனை, கட்டாய இந்தி ரத்து முதலிய சரித்திர சம்பந்தமான உண்மைகளை மகிழ்ச்சியோடு எடுத்துக்காட்டுகிறேன். நாம் தொடுத்த போராட்டம் முடிந்துவிட்டது. இனி அதில் நுழைய வேண்டியதில்லை. என்றிருக்க வேண்டாம். இனியும் போர் இருக்கிறது. அவைகளிலும் தங்களது கட்டுப்பாடும் உழைப்பும் உதவியும் ந்து திராவிடர்களின் வெற்றிக் கொடியை நாட்டவேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். திராவிடம் வாழ்க! ஆரியம் வீழ்க!
இங்ஙனம்,
கோ. லட்சுமணன்
குடிஅரசு - பெட்டி செய்தி - 03.03.1940

புதன், 12 ஜனவரி, 2011

உலகப்புகழ் பெற்ற மனிதர்கள்

கு.வெ.கி.ஆசான்
இந்நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியில், குறிப்பாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்தில், பச்சையப்பர் அறக்கட்டளை நிறுவனங்களின் மேலான பங்களிப்பு போற்றுதலுக்கு உரியதாகும்.
இளமை


காஞ்சிபுரம் பாலாறு பாய்வதால் வளம்பெற்ற ஊர். பவுத்த, சமணத் துறவியர் அறம் வளர்த்த இடம்; சைவ, வைணவ சமயங்கள் போட்டியிட்ட நகரம்; பல்லவ அரசர்களின் தலைநகர்; நெசவுக்குப் பெயர் பெற்ற ஊர்; அறிஞர் அண்ணாவைத் தமிழ் உலகிற்குத் தந்த பெருமைக்கு உரிய நகரம்; இக் காரணங்களால் அதற்கு மேலும் சிறப்புகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. பச்சையப்பரின் பெற்றோராகிய விசுவநாத முதலியாரும் பூச்சியம்மாளும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு முதலில் இரண்டு பெண் மக்கள். மூத்தவர், சுப்பம்மாள். அடுத்தவர், அச்சம்மாள், மூன்றாவது குழந்தை கருவில் இருந்தபொழுது, தந்தை இறந்தார். அவருடைய நண்பர் ரெட்டிராயர், சென்னைக்கு வடமேற்கில் உள்ள பெரியபாளையத்தில் செல்வாக்குடன் வாழ்ந்தவர். அவருடைய ஆதரவில் வாழ, பூச்சியம்மாள், அங்குக் குழந்தைகளுடன் குடியேறினார்; கருவில் இருந்த ஆண் குழந்தை அங்கு பிறந்தது; 1754 இல் பிறந்த அக் குழந்தை பிற்காலத்தில் பச்சையப்பர் எனப் புகழ்பெற்றது.
சென்னையில் நிலையான ஆதரவு
தெலுங்கு மொழியைக் கற்கும் வகையில் பச்சையப்பனின் கல்வி பெரியபாளையத்தில் தொடங்கிற்று. ஆனால் அது நீடிக்க வில்லை. ஆதரவு கொடுத்து வந்த ரெட்டி ராயர் திடீரென இறந்தார். ஆகையால் குழந்தைகளுடன் ஆதரவு தேடித் தாய் சென்னையைச் சேர்ந்தார். தனக்கு இருந்த குடும்பச் செல்வத்தைத் திரட்டி-வைத்திருந்தார். ஆனால் அதைக்கொண்டே எத்தனை நாள் காலம்தள்ள முடியும் என ஏங்கினார். இந்நிலையில் நெய்தவாயல் பவுனி நாராயணப் பிள்ளை என்பவர் அளித்த ஆதரவு, பூச்சியம்மாள் குடும்பத்திற்கு நிலையானதும் கிடைத்ததற்கு அரியதும் ஆன துணை ஆயிற்று. நெய்தவாயல் அவருடைய சொந்த ஊர்; பவுனி என்பவர் அவரைப் பணிக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர். இந்த இரண்டையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தார், நாராயணப் பிள்ளை. பச்சையப்பர் அறிவுடனும் திறமையுடனும் வளரவும், புத்திக் கூர்மையுடன் வேலையும் வாணிகமும் செய்து பெரும்பொருள் சேர்க்கவும், இவ்வாறு நாற்பதே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பின்பு அவருடைய பெருஞ்செல்வத்தை நிலை நிறுத்தவும் காரணமாக நாராயணப் பிள்ளை இருந்தார்.
அமைதி இல்லாத காலம்
பச்சையப்பர் வாழ்ந்தது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. அய்தராபாத் நைஜாம், ஆர்க்காட்டு நவாப், தஞ்சாவூர் மராத்திய மன்னர், பாளையக்காரர்கள், குறு நில மன்னர்கள், மைசூரின் அய்தர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர், ஃபிரான்சுக்காரர்கள் முதலியவர்களிடையே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. அதன் காரணமாக அமைதி இல்லை; மக்கள் துன்பப்பட்டார்கள். மெல்ல மெல்ல, மற்றவர்களின் அதிகாரம் மறைந்தது அல்லது தணிந்தது; ஆங்கிலேயர் அதிகாரம் ஓங்கியது; நிலைபெற்றது.
துவிபாஷி
நாராயணப் பிள்ளை ஆங்கிலேயரிடம் துவிபாஷியராய், அதாவது தமிழ் _ ஆங்கிலம் இரண்டு மொழி தெரிந்த மொழிபெயர்ப்-பாளராய்ப் பணியாற்றினார். அவருடைய வழிகாட்டலில், பச்சையப்பர் வாணிகமும், மொழிபெயர்ப்புத் தொழிலும், பல்வேறு வகைப்-பட்ட அதிகாரிகள், செல்வர்கள், ஆட்சியாளர்-கள் முதலியவர்களிடம் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளும் திறனும் கற்றுக்கொண்டார்.
செல்வம் சேர்த்தார்:
இதற்கு இடையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கீழ் வேலைபார்க்க விரும்பி, அவருடன் சென்னைக்கு வடக்கில் இருந்த பாலவாயல் சத்திரம் எனும் ஊருக்குப் பச்சையப்பர் வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிட்டார். ஆனால் அவரை நாராயணப்-பிள்ளை திரும்ப அழைத்துவந்து, நிக்கலஸ் என்பாருக்கு மொழிபெயர்ப்பாளராய் (துவிபாஷியாய்) அமர்த்தினார். அத்துடன் பலவகை வாணிகமும் செய்து பச்சையப்பர் பொருள் சேர்த்தார். அவருடைய தமக்கை-யருக்குத் திருமணங்கள் நடந்தன.
ஆங்கிலேயருக்கு உரிய நிலங்கள் பூவிருந்த வல்லி, திருப்பாச்சூர் ஆகிய இடங்களில் இருந்தன. அவைகளை உழுதவர்கள் தரவேண்டிய குத்தகையை ரொக்கமாக முன்கூட்டியே பச்சையப்பர் தந்துவிடுவார். பின்பு குத்தகை நெல்லை வசூலித்து, வியாபாரம் செய்து நல்ல லாபம் பெறுவார்.
இவ் வகையிலான சம்பாதனை மட்டுமன்றி, குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுக்குக் கடன் கொடுத்து, வட்டியை ஊதியமாகப் பெற்றார். தஞ்சையை ஆண்ட மன்னருக்கு அவ் வகையில் ஒரு லட்சம் வராகன் கடன் கொடுத்தார்!
ஆர்க்காட்டு நவாப்பாகிய வாலாஜாவின் அவையில் ஆங்கிலேயரின் பிரதிநிதியாக, ஜோசஃப் சலிவன் இருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து, தமது செல்வாக்கையும் செல்வத்தையும் பச்சையப்பர் வளர்த்துக்-கொண்டார்.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, கோமளேஸ்வரன்பேட்டை முதலிய இடங்-களிலும், தஞ்சாவூரிலும் குடியிருந்து கொண்டு தம் தொழிலைப் பச்சையப்பர் நடத்தினார். மூத்த தமக்கையின் மகளை மணந்துகொண்டார். குழந்தை இல்லாததால் மற்றொருவரையும் மணந்தார். இரண்டு மனைவியருக்கும் இடையில் ஓயாத சண்டை. ஆகையால் பச்சையப்பருக்கு மன நிம்மதி போயிற்று. உடல் நலம் கெட்டது. 1794 மார்ச் 31 இல் தஞ்சை அருகில் திருவையாறு எனும் ஊரில் இறந்தார்.
அறக்கட்டளை
இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு தம் சொத்துக்கள் குறித்து, இ-றுதி விருப்ப ஆவணம் (உயில்) எழுதிவைத்திருந்தார். அதைக் குறித்து நாராயணப் பிள்ளைக்கும் மடல் எழுதியிருந்தார்.
பச்சையப்பரின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த ஒரே பெண், திருமணத்திற்கு முன்பே மறைந்தார். அவருடைய மூத்த தமக்கைக்கும் மூத்த மனைவிக்கும் எழுதிவைத்த சொத்துப் போக, மீதியை அறக்காரியங்களுக்கு ஒதுக்கி, அதை நாராயணப்பிள்ளை நிர்வகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். பச்சையப்பருக்கு வாரிசு இல்லை; உறவினர்கள் சொத்துக்கு உரிமை கோரி வழக்குப் போட்டனர்; தோற்றனர்.
இந் நிலையில், ஆங்கில அரசு வழக்-குறைஞராக வந்த ஜார்ஜ் நார்டன், பச்சையப்-பரின் அறக்கட்டளைச் சொத்துகளை ஒன்று சேர்த்தார்; வகைப்படுத்தினார். பச்சையப்பர் சொத்தில் 1841 இல் வட்டியுடன் எட்டு லட்சரூபாய் திரண்டது. அதில் கோயில் முதலிய அறக்காரியங்களுக்கு நாலரை லட்சம் போக, மீதியைக் கல்விக்குச் செலவு செய்ய முடிவு ஆயிற்று.
சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் முதலில் உயர்நிலைப் பள்ளிகள் தோன்றின. சென்னையில் இருந்த பள்ளி, கல்லூரியாக 1880 இல் உயர்ந்தது. பழம்பெரும் கல்லூரியான பச்சையப்பர் கல்லூரி, கணக்கற்றவர்-களின் கல்வித்தாகத்தைத் தீர்த்தது. இன்று பச்சையப்பர் அறக்கட்டளையுடன் பிறவும் சேர்ந்து, கல்வி அறம் வளரச் செய்கின்றன.